மியான்மரில் இடம்பெறும் இராணுவ அடக்குமுறைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை மீள வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் 38 பேர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு நாள் கழிந்து மக்ரோன் தனது முன்னைய கோரிக்கையை இன்று மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
மியான்மரில் இராணுவ அடக்குமுறையின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சமீபத்திய தேர்தலின் வெளிப்படுத்திய மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஜனநாயக ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் எப்போதும் ஜனநாயக உரிமைக்காகப் போராடும் மியான்மர் மக்கள் பக்கத்தில் நிற்கிறோம் எனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றும் மியான்மரில் பல இடங்களில் இராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
போராட்டக்காரர்கள் மீது இன்றும் பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசித் தாக்கியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன்போது ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.